Tuesday, October 18, 2011

மகாராணி

மகராணி:

நில மகளின் குலமதிலே

நிலா முகமாய் மழலையென்று

பொன் நகை நிறமாய்

கண் பலவகை வியக்க

வாள்வெட்டும் வலியினிலே தாய்க்கு

ரத்தம் சொட்ட நிலமேலே

செந்திலக நிற உடலாய்

வந்துலகாள வந்தாய் மழலையென

உலகில் பலரழுகை நிறுத்திடவே

ஓடி வந்து காத்திடவே

கண்ணீரும் செந்நீருமாய் கருணைக்கொண்டு

பிறந்த சிசு மகாராணி



பிஞ்சுக் கரங்கள்தாம் தீண்ட வருதென்னை

மகிழ்ச்சிப் பெருங்கடலில் மாவரசன் உன் தந்தை

அம்மா என்றுதாம் நீ

அழைக்கும் குரல் கேட்க

சும்மா அள்ளித் தருகின்றாள்

தாய்ப் பாலுடனேத் தமிழ்ப்பாலும்

உடல் வருத்தி வளர்த்தனரோ!

உயிர் உருக்கி வளர்த்தனரோ!

ஆசைகளைப் பெருக்கினரோ - மகாராணி

உம்மை வளர்க்கயிலே

உணவதனை மறந்தனரோ!

உரக்கமனதத் துறந்தனரோ!

காற்றையும் வடிக்கட்டி

நல்ல சுவாசமதைத் தந்தனரோ!

அறிவூற்று உமையீன்ற

நிலமகளும் வான்மகனும்

புன்னியம் யாது செய்தனரோ

உன்னுடன்தான் பிறந்தவர்கள்?

பாவமென்ன செய்தோமோ

உம்முடனேன் பிறக்கவில்லை?

பள்ளிப் பருவமதில் நண்பர்கள்

பலக் கோடியரோ

ஏதோத் தவறித் செய்த புன்னியமே

நானும் உந்தன் நண்பனென



தடுக்கி விழுந்தால் நான்

தோல் தந்து தூக்கிடுவாய்

பாழ்கிணற்றில் மூழ்கினால் நான்

பாய்ந்து வந்து தூக்கிடுவாய்

செல்லமாய்த் தண்டித்து

என் தவறுகளைத் துண்டித்து

கால் பதிக்கும் இடமதிலே

எனைத் தாங்கி நிற்கும் பொற்கரமே

என் சிரமதுவைக் கொணர்ந்தாலும்

ஈடாகாதும் நிழலினுக்கே



வர வேண்டும் வர வேண்டும்

என் கண் மூடினாலும் ஊர்வலத்தில்

தர வேண்டும் தர வேண்டும்

ஒருப் பிடி மண் உன் கரத்தால்

இட வேண்டும் இட வேண்டும்

ஓரரிசி என் வாயில்

அப்பொழுதுதான் என்னுயிர் செல்லும்

சொர்க்கத்தின் நுழைவாயில்



வார்த்தைகள் இடியாயின வானில்

முனகல்கள் இசையாயின காற்றில்

அசைவுகள் சிலையாயின கோவிலில்

அலை அஞ்சின உம்பாதம் பதிந்த கரை நனைக்க

நிலவஞ்சியது சூரிய உன் முகப்பொலிவில்

சூரியன் அஞ்சியது நிலவுன்

சாந்தக் குளிர்குணம் கண்டு

இயற்கையும் அஞ்சி நிற்கிறது

எதுதான் எஞ்சி நிற்கிறது?

உந்தன் பாசப்புயலிலும்

எரிமலையின் அமைதியிலும் கண்டுவிட்டு மிரளாமல்

திரளாக மக்கள் கூட்டம்

களத்திலுக்கு- காத்திருக்கு உன் விரலசைவின் ஆணைப்பெற

கொடூர அன்பான அரவணைப்பில் வாழ்ந்துவிட

உம் வார்த்தை ஒரு நூலகம்

சமையலறை ஒரு கானகம்

தாழ்வாரம் தென்றல் தவழுமிடம்

சிலநேரம் நீ நடக்கையிலே

அற்புதமான இல்லத்தரசி

ஆட்சி செய்யும் அலுவலகம்

உன் வீட்டில் ஓட்டடையாகவாவது இருக்க விரும்புகிறேன்

நீங்காதப் பற்றுடனே என்றும் துடைத்திடாதே



பெற்ற மக்கள் சிலர்

அன்பால் பெற்ற மக்கள் பலர்

தாயுன் நட்பினிலே பிள்ளைகளாய்

நாங்கள் வாழ்கின்றோம்

எங்கிருந்தாலும் எங்களுடன்

பாசமிகு வான்வெளியே



மங்கை மகள் ராணி

இத்தரணிப் பெற்ற கங்கை மகாராணி

தைரியத்தின் தங்கை மகாராணி

தானத்தின் செங்கை மகாராணி

நிழலாய் ஏழைக்குப் புங்கை மகாராணி

அனலாய்த் தீமைக்கு வேங்கை மகாராணி

சிவத் தாண்டவச் சதங்கை மகாராணி

மாதர்க்குப் பாதகமெனில் பொங்கும் மகாராணி

இறைவன் இவ்வுலகில் எமக்குக் கொடுத்த

பங்கும் மகாராணி தங்கம் மகாராணி

தமிழ்ச் சங்கம் மகாராணி

என்னுள் ஒரு அங்கம் மகாராணி

எங்கும் மகாராணி அன்பால் ஆட்சி செய்வதில்

எல்லோரும் நலம்பெற வேள்வி செய்வதில்

மகாராணி மகாராணி மகாராணி

எண்ணி எண்ணி எழுதுகிறேன்

உம்மை எண்ணி எண்ணி எழுதுகிறேன்

எல்லையில்லா உன் அன்புக்கு

முடிவுத் தரும் மொழியில்லை வார்த்தையும் இல்லை

..................................................................................

2 comments:

  1. அருமை கலாநிதி !
    வாழ்த்துக்கள் ! <3

    ReplyDelete
  2. மகாராணிக்கு வாழ்த்துக்கள்! கவிதை வளம் மேலும் இது போல் ஜொலிக்க வாழ்த்துக்கள்! அருமை கலாநிதி!

    ReplyDelete